சென்னை:
திமுக தலைவரும், தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கலைஞர் 50 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியின் தலைவராகவும், 5 முறை தமிழக முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் தான் போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தவர்.
எனவே இன்று தி மு க கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் தி மு க தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்திலும் சிஐடி காலனி இல்லத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் சென்று கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, ஏ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர், சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன், திமுக பொருளாளர் டி.ஆர்.,பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தி.மு.க.தொண்டர்கள் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று திமுகவினர் மற்றும் பொதுமக்கள் இன்று கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு அவரவர் வீடுகளில் கலைஞர் படத்தை வைத்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.