முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், குன்னூர் விரைகிறார் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின். மேலும், விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌத்ரியும் தமிழகம் வருகிறார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகளோடு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் இதுவரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் சூலூரிலிருந்து வெலிங்டன் நோக்கி சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
இந்த விமானத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த தகவல் வெளியானதும் மத்திய அமைச்சர்களோடு பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். விபத்து நடந்து இடத்திற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் சில மணி நேரங்களில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, விபத்து நடந்த குன்னூருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விரைந்துள்ளார். மேலும், விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌத்ரியும் தமிழகம் நோக்கி விரைந்துள்ளார்.