தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 10ம்தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காககாலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை, காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களிடம் காவல்துறையினர் கடுமை காட்டாமல் நடந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டதால் காவல்துறையினர் பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை.ஆனால் பொதுமக்களோ இதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு எந்த வித கட்டுப்பாடின்றி சுற்றி திரிந்தனர்.
இதனைத் தொடர்ந்து இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, வௌியில் சுற்றி திரியும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஊரடங்கு அமல்படுத்தியதின் நோக்கமே சிதைந்துவிடும் நிலை உருவாவதை கண்ட காவல்துறையினர் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர். திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் எளிதாக கடந்து செல்ல முடியாத அளவிற்கு தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும், வாகனங்களில் கடந்து செல்பவர்கள் காவல்துறையினரின் விசாரணையின்றி கடந்த போக முடியாத படி தடுப்புக்கள் மாற்றி அமைத்துள்ளனர். மேலும் அவசியமின்றி சுற்றி திரிபவர் என்று தெரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் கொண்டு செல்லப்படுகிறது. நேற்றும், இன்றும் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வரிசையில் நிறுத்தும் பணி தொடங்கி உள்ளது. இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.