தஞ்சாவூர்:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒன்றாகத் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் அடைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் உள்ள கோயில் அர்ச்சகர்கள் வருமானம் ஏதுமின்றி உள்ளதால் இஸ்லாமிய அமைப்பு சார்பில் சிறிய கோயில் அர்ச்சகர்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் நடத்தப்படாததால், சிறிய கோயில்களின் அர்ச்சகர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
தஞ்சாவூர் அய்யங்கடைத் தெரு பள்ளிவாசல் இமாம் முகமது ருஸ்தும் அலி ஏற்பாட்டின்படி, ரசா ஏ முஸ்தபா அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள விநாயகர் கோயிலில் மற்றும் அப்பகுதியில் உள்ள 15 இந்து கோயில் அர்ச்சகர்களின் குடும்பங்களுக்கு நேற்று தலா ரூ.800 மதிப்புள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. இது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அறக்கட்டளையின் நிர்வாகி சையது முதஹர் கூறுகையில்:-
எங்களது அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினோம். இதேபோல் கோயிலில் அர்ச்சகர்களாகப் பணிபுரிபவர்கள் வேலையிழந்து இருப்பதால், தற்போது அவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளோம். அவர்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர். இந்தச் செயல் மனிதர்கள் சாதி, மதம் ஏதும் பாராமல் எல்லோரும் ஒற்றுமையோடு இருப்பதைக் காட்டுகிறது. எங்களுக்கு இதில் மனநிறைவு ஏற்பட்டது என்றார்