ரஜோரி:-
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் தொலைதூரப் பகுதியில் உயிருக்கு போராடிய 85 வயது மூதாட்டியை இந்திய ராணுவம் காப்பற்றியுள்ளது.
மாணிக் சர்மா என்ற இளைஞர் ரஜோரி மாவட்டத்தின் தொலைதூர பகுதியில் தனியாக வீட்டில் வசித்து வரும் தனது 85 வயதான பாட்டி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஊரடங்கு காரணமாக மருத்துவ உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் உடனடியாக அவரை காப்பாற்றுமாறு பிரதமர் அலுவலக (PMO) ட்விட்டர் கணக்கிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து களத்தில் இறங்கிய இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட மூதாட்டியை அவரது கிராமத்திற்குச் சென்று காப்பாற்றி உள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில்:-
தகவல் கிடைத்ததையடுத்து ராணுவ குழுவினர் ராணுவ மருத்துவருடன் தகுந்த மருத்துவ உபகரணங்களுடன் ரஜோரி மாவட்டத்தில் சியால்சுய் பகுதியில் அமைந்துள்ள தயாலா கிராமத்திற்கு சென்றனர். அந்த மூதாட்டிக்கு இதய தமனி கோளாறு மற்றும் டிஸ்பெப்சியா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்பொழுது அவர் நலமாக உள்ளார். அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் குடும்பத்தோடு சேர்க்கப்படுகிறார் என்றார்.