திருப்பூர்:-
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கொரோனா பேரிடருக்கு பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள், தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், திரைத்துறையினர் என தங்கள் பங்குக்கு பேரிடர் நிவாரணமாக பெரும் தொகை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த ஜீவானந்தம் (6) என்ற சிறுவன் கொரோனா நிவாரண நிதியாக தனது பங்கிற்கு தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் காசை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் K. விஜயகார்த்திகேயனை சந்தித்த ஜீவானந்தம் தனது உண்டியல்கள் சேமிப்பாக 3704 ரூபாயை முதலமைச்சரின் கொரோனா நிவாரணத்திற்கு அளித்துள்ளார்.
சிறுவனின் தந்தை சந்திரன் கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்யும் கூலித் தொழிலாளி. ஊரடங்கு உத்தரவால் தொழிலின்றி வீட்டில் முடங்கி உள்ளார். இனி எப்பொழுது தொழிலுக்கு செல்வோம் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையிலும் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவனது சேமிப்பு பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.
கலெக்டரின் அறிவுறுத்தல் படி தந்தை மகன் இருவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வங்கியில் முதலமைச்சர் நிவாரண நிதியில் பணத்தை செலுத்தி விட்டு அதற்கான ரசீதுடன் கலெக்டர் சந்தித்து அவரின் வாழ்த்துக்களையும், அன்பையும் பெற்றுள்ளார் ஜீவானந்தம்.