தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தாக்கிய ஆழிப்பேரலையான சுனாமியின் 15ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தை சுனாமி பேரலைகள் தாக்கியது. அதற்கு முந்தைய நாளான கிறிஸ்துமஸ் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடி விட்டு சென்றவர்களுக்கு மறுநாள் சோகமாக மாறும் என நினைக்கக்கூட செய்திருக்க மாட்டார்கள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சரிந்தன. ரிக்டர் அளவுகோலில் 9.3 வரை பதிவான உலகின் 2வது பெரிய நிலநடுக்கமாக அறியப்படுகிறது. இதுவே ஆழிப் பேரலையாக உருவாகி, கடற்கரையை நோக்கி ஆவேசமாக பொங்கி பாய்ந்தது. கிட்டத்தட்ட 100 மீ மேலாக எழும்பிய கடல் அலைகளால் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள். இந்தியாவில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது.
பல்லாயிரக்கணக்கானோர் உறவுகளையும், உடைமைகளை இழந்தனர். ஒட்டுமொத்த தமிழர்களின் மனதிலும் ஆறாத வடுவாக மாறிய இந்த ஆழிப்பேரலையின் 15ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.