மதுரை:-
கொரோனாவில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள கழுத்தில் ஜப்பான் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் தடுப்பு அட்டையுடன் வலம் வருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. இதையடுத்து மீண்டும் கொரோனா தன்னை தாக்கி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளார்.
இதனால் அமைச்சர் செல்லூர் ராஜூ எங்கு சென்றாலும் கழுத்தில் நீல நிற அடையாள அட்டை போன்ற வைரஸ் தடுப்பு அட்டையை பயன்படுத்தி வருகின்றார். சமீபத்தில் ரோட்டரி சங்க விழாவில் பங்கேற்க வந்த செல்லூர் ராஜூ, தனது கழுத்தில் இந்த வைரஸ் தடுப்பு அட்டையை கழுத்தில் அணிந்தபடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சரி, இந்த அட்டையை ஏன் அவர் அணிந்துள்ளார்:-
“வைரஸ் ஷட் அவுட்” (Virus Shut Out) என்ற பெயரில் ஜப்பான் நிறுவனம் ஒன்று தயாரித்து இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வைரஸ் தடுப்பு அட்டையை அணிவதன் மூலமாக 1 மீட்டர் சுற்றளவுக்கு வைரஸ் கிருமிகள் மூச்சுக்காற்றின் மூலம் பரவுவதை கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
இந்த வைரஸ் தடுப்பு அட்டையில் இருக்கும் எட்டு துவாரங்களின் மேலுள்ள உரையை துளையிட்டு விட்டு, கழுத்தில் அடையாள அட்டை போல மாட்டுக் கொண்டால் போதும். இந்த அட்டைக்குள் பவுடர் போல நிரப்பப்பட்டுள்ள குளோரின் டை ஆக்ஸைடு காற்றில் பரவி கிருமிகளை தடுக்கும் என்கின்றனர்.
இந்த வைரஸ் தடுப்பு அட்டையின் 6 மாதங்களுக்கு முன்பாகவே உலக அளவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. அமேசானில் கடந்த மாதம் முதல் விற்பனைக்கு வந்துள்ள இதன் விலை, 150 முதல் 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் இதன் பயன்பாட்டு நாட்களுக்கு ஏற்ப, விலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
பெரும்பாலும் இது போன்ற அட்டைகள் அதிக நபர்கள் கூடும் இடத்திலோ அலுவலகங்களிலோ உதவியாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. முகக்கவசம் அணிந்து கையை சானிடைசரால் கழுவி கூடுதல் பாதுகாப்புக்கு இந்த அட்டையையும் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
இந்த அட்டை கொரோனாவை தடுக்குமா??
இந்த அட்டை, வைரஸை நெருங்க விடாமல் தடுக்கும் என்று சொல்லப்படும் நிலையில், கொரோனா வைரஸை நெருங்கவிடாமல் தடுக்குமா? என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஆராய்ச்சிகளும் நிரூபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகஎதைச் செய்தாலும் வித்தியாசமாக செய்யும் நபர் அமைச்சர் செல்லூர் ராஜூ. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வைகை அணையை தேர்மாகொல் அட்டைகள் கொண்டு மூட முயன்று சீனா வரை பிரபலமானார்.
இந்நிலையில் இந்த வைரஸ் தடுப்பு அட்டையை இவர் அணிந்து இருப்பதன் மூலமாக இந்த வைரஸ் தடுப்பு அட்டைக்கும் சந்தையில் இனி வாழ்வு கிடைக்கலாம். இனி வரும் நாட்களில் அனைவரது கழுத்திலும் இந்த அட்டை தொங்கலாம்.
ஆனால் அதே சமயம் இந்த வைரஸ் தடுப்பு அட்டை அமெரிக்கா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் ஒருவர் நம்மீது தும்மினால் அந்த நீர்த்திவலைகளில் வைரஸ் இருந்தால் இந்த அட்டையால் அதனை தடுக்க முடியாது.