பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரேஷன் அட்டைக்கு பொங்கல் பரிசாக 1 கிலோ அரிசி,1கிலோ சர்க்கரை,20 கிராம் உலர் திராட்சை,20 கிராம் முந்திரி,5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புதுண்டு ஆகிய பொருட்களுடன் ரூ.1,000 பணமும் வழங்கப்பட உள்ளது.இந்த நிலையில் வருகிற 9 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை 4 நாட்கள் ரேஷன் கடைகள் மூலம் இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதில் மின்னணு அட்டை கொண்டு வந்தால் மட்டுமே பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும் என்றும்,கூட்ட நெரிசலை தவிர்க்க தெரு வாரியாக குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை முன்கூட்டியே கடைகளின் முன்பு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களின் விவரங்களை தெரு வாரியாக அட்டவணை படுத்தி ஒட்ட வேண்டும்.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பெற முடியும்.அவ்வாறு பெயர் இல்லாதவர்கள் பெயர் உள்ளவர்களின் ஒருவர் ஆதார் அட்டையை வைத்தோ,அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் கடவுச்சொல்லை வைத்தோ பொங்கல் பரிசை பெற முடியும். குறிப்பிட்ட 4 நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காதவர்களுக்கு வருகிற 13 ம் தேதி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.