சென்னை :
பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப் கேம் மதன். இவர் மீது சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் பலர் புகார் அளித்துள்ளனர். அதில் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கிரைம் பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தலைமறைவாக இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையில் மதனின் மனைவி கிருத்திகாவின் பெயரில் யூடியூப் இயங்குவதும், அவர் அதன் பங்குதாரர் என்பதாலும் கிருத்திகாவை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.இந்நிலையில், காவல்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பப்ஜி மதன் இன்று கைது செய்யப்பட்டார்.
தருமபுரியில் கைது செய்யப்பட்டிருக்கும் மதனை இன்று மாலைக்குள் சென்னை அழைத்து வர காவல்துறையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். இதற்கிடையே, ஆபாசமாக விடியோ பதிவிட்டு ரூ.5 கோடி அளவுக்கு பணம் சம்பாதித்திருப்பதாகக் கூறப்படும் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முடக்கியுள்ளது.