ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, ஓய்வூதியதாரர்களுக்குப் பணபலன், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கக் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஊழியர்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறைந்த அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், அலுவலகம் செல்வோர், வெளிமாவட்டங்களுக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் பல பேருந்து நிலையங்கள் வெறிசோடி காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று பிற்பகலில் சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல ஆணைய வளாகத்தில், ஆணையர் லக்ஷ்மிகாந்த் தலைமையில் தொழிலாளர் நலச்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.