பிரபல கவிஞரும், காமராஜர் திரைப்படத்தின் வசனகர்த்தாவுமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக் குறைவால் நேற்றிரவு சென்னையில் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பத்தினிப்பாறையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. நவீன இலக்கியத்தில் எளிய தமிழில், தமிழ்ச்சமுதாயத்தின் எளிய மனிதர்களின் எளிய வாழ்வியலை தனது எழுத்துக்களில் வடித்து புகழ்பெற்றவர் பிரான்சிஸ் கிருபா.
மல்லிகைக் கிழமைகள், ஏழு வால் நட்சத்திரம், சம்மனசுக் காடு உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். 90களுக்குப் பிறகு கவிதைகளில் கணிசமான பங்களிப்பு காரணமாக நவீன தமிழ்க் கவிதை வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட கவிஞராகத் திகழ்ந்தார்.
கர்ம வீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘காமராஜ்’ திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார் பிரான்சிஸ் கிருபா. 2007 ஆம் ஆண்டு கன்னி எனும் புதினத்தை எழுதி, ஆனந்த விகடனின் விருது பெற்றுள்ளார். இளம் தலைமுறையினரைக் கவரும்விதமான புதுக்கவிதைகளைப் படைத்து பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ள சிறந்த படைப்பாளியான பிரான்சிஸ் கிருபா, உடல்நலக் குறைவால் காலமானார்.