பாகிஸ்தான், நியூஸிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பாதுகாப்புக் காரணங்களுக்காக தொடரை ரத்து செயவதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்குப் பயணம் செய்துள்ள நியூஸிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. ராவல்பிண்டி மைதானத்தில் ஒரு நாள் போட்டிகளும், லாகூர் மைதானத்தில் T20 போட்டிகளும் நடைபெற இருந்தன. முதல் ஒருநாள் போட்டி பகல் இரவு ஆட்டமாக ராவல்பிண்டி நகரில் பார்வையாளர்கள் இன்றி நடைபெறவிருந்தது. ஆனால், போட்டி தொடங்க சில நிமிடங்களுக்கு முன் தொடரை ரத்து செய்வதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக நியூஸிலாந்து பாதுகாப்பு ஆலோசகர்களின் அறிவுரைப்படி, பாகிஸ்தானுடனான தொடரைத் தொடர முடியாது. ஆதலால், தொடரை ரத்து செய்து உடனடியாக நியூஸிலாந்து வீரர்கள் நாடு திரும்புவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன் அறிக்கையில், “தாங்களும் அரசும் முழுபாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். பிரதமர் இம்ரான்கான், தனிப்பட்ட முறையில் நியூஸிலாந்து பிரதமருடன் பேசியுபோது சிறப்பான உளவுத்துறை இருப்பதால், எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் வராது என்று உறுதியளித்துள்ளார். அதன்பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்த பின்புதான் நியூஸிலாந்து தொடருக்கு ஒப்புதல் அளித்திருந்தனர்” என்று கூறியுள்ளது. நியூஸிலாந்து அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் விளையாட வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்