தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஐந்து நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலின் தென்கிழக்கில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. காலை 8.30 மணியளவில் அது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மையம் கொண்டிருந்தது.
இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (நவம்பர் 11) காலை முதல் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
எனவே, சென்னை மக்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறும் தேவையான உணவுப்பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.
“மீட்புப் பணிகளுக்காக 53 படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்ற 570 ‘மோட்டார் பம்பு’ களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார் அவர்.