திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழனி அருகே அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தற்காலிக ஆங்கில ஆசிரியராக நாட்ராயன் (வயது 30) என்பவர் பணியாற்றி வருகிறார்.
ஏற்கெனவே திருமணமான நாட்ராயன் , அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம், திருமணம் செய்துக்கொள்வதாக பேசிவந்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், கடந்த ஓராண்டாக திருமணம் தொடர்பாக பேசி வந்த ஆசிரியர், அந்த மாணவியை தனது விட்டுக்கு அவ்வபோது அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததைத்தொடர்ந்து, மாணவியின் தாயார் உடனடியாக பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் நாட்ராயன் மீது புகார் அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கை, போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்து போலீசார் உடனடியாக ஆசிரியரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஆசிரியர் நாட்ராயன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் அருள்செல்வன் (வயது 35) பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.