சிவசங்கர் பாபா தங்கமானவர், மிகவும் நல்லவர்; பெண்கள் மீது நாட்டமற்றவர். அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் துளி கூட உண்மை இல்லை. இது திட்டமிட்ட சதி என்று நடிகர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இதையடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக சிவசங்கர் பாபா உட்பட சிலர்மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சண்முகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது,
சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவர் தங்கமானவர். நான் 6, 7 ஆண்டுகளாக சித்தர் வழிபாட்டில் இருக்கிறேன். என் குருநாதர் சிவசங்கர் பாபா.
அவருடன் சுமார் 4 ஆண்டுகளாக இருந்து, அவர் பெயரில் 7 நூல்களை தொகுத்திருக்கிறேன். அவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டு 200 வீடியோக்கள் வந்திருக்கிறது. அந்த குற்றச்சாட்டை பக்தர்களாகிய நாங்கள் மறுக்கிறோம். அதில் ஒரு துளி கூட உண்மை இல்லை.
சுசீல் ஹரி பள்ளியில் படித்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு டிசி கொடுக்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் தான் பத்ம சேஷாத்ரி பள்ளி பற்றி வந்ததை பார்த்து நாமும் ஆரம்பிக்கலாம் என்று பேசியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு பள்ளி நிர்வாகம், சில ஆசிரியர்கள் மீது கோபம். அவர்களை பழிவாங்க பாபா மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி, சாட்சிகளையும் தயார் செய்திருக்கிறார்கள்.
இது திட்டமிட்ட சதி. இந்த பள்ளியில் அனைத்து மதம், சாதியை சேர்ந்தவர்கள் படிக்கிறார்கள். பாபா சமுதாய சிந்தனைகள் கொண்டவர். அவருக்கு மதம் கிடையாது, ஜாதி கிடையாது, எதன் மீதும் பற்று கிடையாது.
ஒரு மகானை, சித்தரை இரண்டு நாட்களில் அசிங்கப்படுத்த முடியுமா?. அவர் மீது பொய்யாக அவதூறு பரப்பப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
பத்ம சேஷாத்ரி விஷயத்தை திசை திருப்ப இப்படி சொல்கிறார்கள். பாபாவுக்கு உலகம் முழுவதும் 50 லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். அவர் மீதான குற்றச்சாட்டுகளால் மனஉளைச்சலில் இருக்கிறோம்.
எதிர்தரப்புக்கு நிர்வாகம் மீது கோபம். அதற்காக பாபா மீது புகார் சுமத்துகிறார்கள் என்றார்.
சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக பேசியுள்ள சண்முகராஜனை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
இதனிடையே, தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீசில் புகார் கொடுத்தார்.
பின்னர் சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதால், அந்த புகாரை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார் குறிப்பிடத்தக்கது.