தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகை அச்சுறுத்த வரும் புதிய கொரோனா திரிபுக்கு ”ஒமிக்ரான்” என பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.
கொரோனாவின் மற்றொரு திரிபொன்று தென் ஆப்ரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் கண்டறியப்பட்டிருந்தது. இதுவரை வந்த திரிபுகளில், இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகளும் அறிவியலாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய கொரோனா திரிபு, ‘பி.1.1.529’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது உலக சுகாதார நிறுவனம் சார்பில் இதற்கு இன்று கிரேக்க குறியீட்டு பெயரொன்று வழங்கப்பட்டுள்ளது.
‘ஒமிக்ரான்’ என்றால் கிரேக்கத்தில் ‘சிறிய’ என்று பொருள். இந்த புதிய திரிபு, மிக அதிகமாகவும் வேகமாகவும் பன்மடங்காக பெருகும், பிறழ்வும் தன்மையோடு இருப்பதாக இதை கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், புதிய கொரோனா வைரஸ், ‘டெல்டா’ வகை வைரசை விட மிகவும் மோசமானது என, விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா மண்டலத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வருவோருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, பிரிட்டன் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளி்ல் இருந்து வருவோருக்குத் தடை விதித்துள்ளது.
மேலும், புதிய வகை வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதால், தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமிபியா, லெசோதோ, எஸ்வாதினி, மொசாம்பிக், மலாவி ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் அமெரிக்கா வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை முதல் விதிக்கப்படும்.
இந்த கட்டுப்பாடுகள், தடைகள் எத்தனை நாட்களுக்கு இருக்கும் எனத் தெரியாது. இந்த 7 நாடுகளில் இருந்து வரும் அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்காவில் வசிப்போருக்கும் கட்டுப்பாடுகள் இருக்காது. அவர்களுக்கு பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் மட்டும் இருக்கும் என வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி கூறியுள்ளார்.
இதனிடையே இந்த புதிய வகை கொரோனா திரிபான ஓமிக்ரானை பூஸ்டர் தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்த உள்ளதாக அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் உறுதியளித்துள்ளது.