பெண்களை ஏமாற்றி பாலியல் மோசடி செய்த நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் காசி குறித்து தாம் முன்பே எச்சரிக்கை செய்ததாக பிரபல பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. காசியின் தந்தை தங்கப்பாண்டியன், அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கல்லூரி படிப்பு முடித்த காசி, தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் தான் ஒரு தொழிலதிபர் போன்ற போலி புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பல சிறுமிகளையும் பெண்களையும் ஈர்த்துள்ளார். பின் அவர்களை நேரில் சந்தித்து நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டு, பின் அதைக்கொண்டு மிரட்டி பணம் கேட்டு மிரட்டுவதும், உடல்ரீதியாக அச்சுறுத்துவதையுமே தொழிலாக செய்து வந்துள்ளார்.
இதேபோல சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரிடம், தனது சுய ரூபத்தைக் காசி காட்டியுள்ளான். உன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ என்னிடம் இருக்கிறது. அதனை வெளியிடாமல் இருக்க எனக்குப் பணம் தர வேண்டும் எனக் காசி மிரட்டியுள்ளான். இதனைக் கேட்டு அதிர்ந்து போன அவர், காசி கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளார்.
பெண் மருத்துவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காசி வெளியிட அதனைப் பார்த்து அவர் அதிர்ந்து போனார். இதையடுத்து காசி குறித்து காவல்துறையிடம் விவரித்துள்ளார். இதையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் காதல் மன்னனாக வலம் வந்த காசியைக் கைது செய்து சிறையில் அடைந்துள்ளார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் முகநூலில் தான் ஒரு பெண்ணியவாதி எனக் காட்டி கொண்ட காசி, டிக்டாக்கில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய பாலியல் கொடூரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளான். இதில் காசிக்கு எதிராக கமென்ட் செய்தவர் தான் அந்த சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர்.
பாடகி சின்மயின் முன்னதாகவே இந்த நபர் மீது பலமுறை புகார்கள் அளித்துள்ளாதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:-
இன்ஸ்டாகிராமில் பல பெண்கள் எழுதியுள்ளனர், இவனைப் பற்றி புகார்கள் எழுப்பியதை நினைவில் கொள்கிறேன். இறுதியாக இந்த மனிதர் சிறையில் இருக்கிறான் என்றார்.