சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் 10 வகையான புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் கோல்டு காபி, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு போன்ற பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகப்படுத்தினார்.
இதனையடுத்து ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களிடமிருந்து மாறுபட்டு, வித்தியாசமான சூழலில், எந்தவிதமான கலப்பும் இல்லாமல், ரசாயனங்களும் சேர்க்காமல், முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கம் இல்லாமல் இந்த 10 புதிய பொருட்களும் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம் என்றும், கறந்த பால், கறந்தபடி தாய்ப்பாலுக்கு நிகராக உருவாக்கப்பட்டு இன்று அறிமுகப்படுத்தப்பட்ட 10 புதிய பொருட்கள் மூலம் மாதம் ரூ.2 கோடி வரை லாபம் வரும் என எதிர்பார்க்கின்றோம் என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
மேலும் ஆவின் குடிநீர் குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என்றும் தனியார் பால் நிறுவனங்களின் விலை உயர்வு காரணமாக ஆவினில் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.