சென்னையில் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் நேற்று அகரம் அறக்கட்டளை சார்பாக “வித்தியாசம் தான் அழகு” , “உலகம் பிறந்தது நமக்காக” என்ற இரு நூல்களின் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேடையில் பேசிய மாணவி ஒருவர், தனது குடும்ப கஷ்டங்களையும், அகரம் அறக்கட்டளை மூலம் தான் கல்வி கற்ற தையும் நினைவு கூர்ந்தார். மேலும் அந்த மாணவியின் தாய் அவரின் பேச்சை ஊரிலிருந்து செல்போனில் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மாணவியின் கதையை கேட்ட நடிகர் சூர்யா மேடையிலேயே கண் கலங்கி அழுதார். மேலும் அந்த மாணவிக்கு அவர் ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் விழாவிற்கு வந்திருந்த பலரது மத்தியிலும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, எந்த தகுதியும் இல்லாத என்னை நடிகனாக ஏற்றுக்கொண்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தான் அகரம் அறக்கட்டளை தொடங்கப்பட்டதாக கூறினார். இதுவரை அகர மூலம் 2500 மாணவ மாணவியர்கள் கல்வி கற்க உதவி செய்து உள்ளோம் எனவும், அடுத்த கட்டமாக “இணை” என்ற திட்டத்தை தொடங்கி முதற்கட்டமாக 100 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.