இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.
நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு பலரும் உயிரிழந்து வருகின்றனர். அந்தவகையில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவித்துவரும் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான திட்டங்கள் மற்றும் உதவிகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அந்த வகையில் தமிழக முதல்வரும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகை அளிக்கப்படும் என்றும், இந்த ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை 18 வயதில் வட்டியுடன் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் அவர்களுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி, விடுதிக்கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.