சென்னை:-
கடந்த மாதம் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாளான இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவுற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் நடைபெற உள்ளது.
இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிகிறது. தமிழக அரசின் கொள்கைரீதியான முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கவும் வாய்ப்புள்ளது.
ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள் தொடர்பாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், கொரோனா மூன்றாவது அலை குறித்தும், புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் குறித்தும், அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.