தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு, என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் (1.10.2021) இன்றும் (2.10.2021) நாளையும் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகின்ற 5ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் உட்பட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இன்று மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு இருப்பதால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்