கைலாசா என்கிற நாட்டை அறிவித்து அந்நாட்டிற்கான நாணயங்களையும் வெளியிட்டு நித்தியானந்தா ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கியபாடு இல்லை.நித்யானந்தாவின் நாணய வெளியீடு அறிவிப்பு வெளியான மறுநாளிலிருந்து கைலாசாவில் ஹோட்டல் வைக்க அனுமதிக்க வேண்டும், விவசாயம் செய்ய நிலம் வேண்டும், ஜவுளிக் கடை வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் அடுத்தடுத்து கோரிக்கைகளை வைக்கத் தொடங்கிவிட்டனர்.
அவற்றுக்கு பதிலளித்த நித்யானந்தா, அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தனது கைலாசா நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.
அந்த அறிவிப்புக்கு பின்னரும் கோரிக்கை பட்டியல் நிறைவு பெறுவதாக இல்லை.இப்போது புதிதாக கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் என மதுரையின் ‘வீர மரபு வீர விளையாட்டுக் கழகம்’ எனும் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய் தோற்று அதிகரித்துள்ளதால் கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுக்களை நடத்துவது சவாலாக உள்ளதாகவும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.