ஓசூர்:-
கிருஷ்ணகிரியில் டிக்டாக் செய்வதற்காக மீனை உயிருடன் விழுங்க முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், காளேகுண்டா பார்வதி நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகன் வெற்றிவேல் (22). கட்டிட மேஸ்திரியாக பணிபுரியும் இவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தையும் உள்ளது. நேற்று முன் தினம் வெற்றிவேள் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது அவர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிக்டாக் வீடியோ செய்வதில் நாட்டமுடைய அவர், பிடித்த மீனில் ஒன்றை எடுத்து அப்படியே விழுங்கி டிக்டாக் செய்ய முயன்றுள்ளார். அப்போது மீன் சுவாச குழாயில் சிக்கி மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, வழக்குப்பதிவு செய்த ஓசூர் டவுன் போலீசார் வெற்றிவேல் குடிபோதையில் மீனை விழுங்கினாரா அல்லது நண்பர்களுடன் பந்தயத்திற்காக, டிக்-டாக் செய்தபோது இவ்வாறு நடந்ததா என, விசாரித்து வருகின்றனர்.