பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு இடைப்பட்ட ஜனவரி 17ம் தேதி அன்று அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரித் திங்கள் 7ஆம் நாள் முதல், இரவு நேர ஊரடங்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ள நிலையில், 14.01.2022 (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும். 16.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.01.2022. தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான 17.01.2022 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 16.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.01.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும். இடைப்பட்ட நளான 17.01.2022 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து
கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அதற்கான பணி நாளாக 29.01.2022 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது.
மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டம், 1881 (Under Negotiable Instruments Act. 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.