கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியான நகைக்கடன் தள்ளுபடி குறித்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவித்திருந்தார். தற்போது நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்க பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
அ) ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினர்
ஆ) நகைக் கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள்
இ) 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக் கடன் பெற்ற குடும்பத்தினர்
ஈ) 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக் கடன் பெற்ற நபர்
உ) கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்
ஊ) கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்
எ) அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரினர்
ஏ). குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்
ஐ) ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்
ஒ) எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினர்
ஓ) ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக் கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமக்கும் கூடுதலாக பெற்ற AAY குடும்ப அட்டைதாரர்கள். ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது கடும் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.