சார் பதிவாளர் அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் வரிசை எண்ணுக்காக காத்திருக்காமல் சார் பதிவாளர் அலுவலகம் வந்தவுடன் உடனடியாக பதிவு செய்யப்படும் என வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஸ்டார் 2.0 மென்பொருளில் தற்போது எவ்வித பாகுபாடும் இன்றி, முன்பதிவு செய்த வரிசையில் பத்திரப் பதிவு நடந்து வருகிறது. இவ்வாறு வரிசைக் கிரமமாக பதிவு செய்யப்படும்போது, சார் பதிவாளர் அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்களது நலனை கருத்தில் கொண்டு, இனிமேல் பத்திரம் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவரில் ஒருவர் 70 வயதை கடந்தவராக இருந்தால், அவர்கள் தங்கள் வரிசை எண்ணுக்காக காத்திருக்காமல் அலுவலகம் வந்ததும் உடனடியாக பதிவு செய்யும் வகையில், மென்பொருளில் உரிய மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பு 2022 ஜன.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.