கொரோனா குறைவதால் தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் பி.கே.இளமாறன் அவர்கள் அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கற்றல்-கற்பித்தல் பணிகள் முடக்கத்தில் உள்ளது. மாணவர்களுக்கு தற்போது கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக கற்பிக்கப்படும் கல்வி முழுமையாக பயன் தராது. தமிழகத்தில் 90% தொற்று குறைந்துள்ளது.
மக்கள் வாழ்க்கையும் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆகையால் மாணவர்களின் நலன் கருதி முடங்கியிருக்கும் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகிறது.
குறிப்பாக தொடக்க கல்வி மாணவர்கள் எழுத்துக்களே மறந்துபோகும் நிலை உருவாகியுள்ளது. மேலும் உயர் நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து வருகிறது. தற்போது பரவல் குறைந்து வரும் காரணத்தால் 9 முதல் 12 ஆம் வகுப்புகளை தினந்தோறும் 5 பாட வேலைகளுடனும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையிலும் பள்ளிகள் இயங்க வழிவகை செய்ய வேண்டும்.
அதேபோல் பள்ளிகள் திறந்தவுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனை பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும். தேவையான அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாதுகாப்பு உபகரணங்களுடன் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும்.
எனவே தற்போதைய சூழலில் கல்வியின் தேவையறிந்து மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை ஜூலை 3 ஆம் வாரத்தில் தொடங்க வழிவகை செய்யும்படி தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.