செங்கல்பட்டு இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நகர காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்து போட்டுவிட்டு, திரும்பிய செங்கல்பட்டு கே.தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக்கை நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசியும், கத்தியால் சரமாரியாக குத்தியும் கொலை செய்தது. இந்தக் கொலையோடு நிறுத்தாமல், செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷையும் ( 22) அந்தக் கும்பல் கொன்றது.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு நகர காவல் துறையினர் தீவிர தேடல் வேட்டையில் இறங்கினர். இதனிடையே இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையதாக மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியொரை பிடிக்க மாமண்டூர் பாலாறு அருகே போலீசார் சென்றுள்ளனர். அப்போது தப்பிக்க முயற்சித்த தினேஷ், மொய்தீன் இருவரும் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதோடு, அரிவாள் கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் 2பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த இரண்டு காவலர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.