சென்னை: பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல் மற்றும் ஆவடி என தற்போது தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள் உள்ளன.
இதில், சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சி என்ற அந்தஸ்தில் உள்ளது. இதனிடையே தாம்பரத்தை புதிய மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகள் குறித்தும், மாநகராட்சி உருவாக்கம் குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சி இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை பேரூராட்சிகளும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.