கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொற்று காரணமாக அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள வயநாடு மாவட்டத்தில் நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. வயாநாட்டில் வைத்திரி அருகே உள்ள பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் சுமார் 13 மாணவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நோரோ வைரஸ் குளிர்காலத்தில் பரவும் வைரஸ்.
இதனை குளிர்காலத்தில் வாந்தியை ஏற்படுத்தும் கிருமி (winter vomiting bug) என்றும் அழைக்கிறார்கள். ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நேரடியாகவே இந்த வைரஸ் பரவும். இதுவும் கொரோனா போல தொற்று வைரஸ் தான்.
இந்த நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் விழிப்புடன் இருக்கவும் அறிவுறித்தியுள்ளார்.
வீணா ஜார்ஜ் தலைமையில் கேரள சுகாதாரத் துறையினர் வயநாட்டில் தொற்றின் தீவிரத்தை ஆராய்ந்தனர். இது குறித்து கூறிய மந்திரி வீணா ஜார்ஜ், ‘தற்போது கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். சூப்பர் குளோரினேஷன் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. குடிநீர் ஆதாரங்கள் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.
மேலும் அவர், முறையான தடுப்பு மற்றும் சிகிச்சை மூலம், நோயை விரைவில் குணப்படுத்த முடியும். எனவே, நோய் மற்றும் அதன் தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வுடன் அனைவரும் இருக்க வேண்டும் என்று கூறினார்.
நோரோ வைரஸ் என்பது இரைப்பை குடல் நோயை ஏற்படுத்தும் ஒருவகை வைரஸ்களின் குழுவாகும்.
இந்த வைரஸ் வயிறு மற்றும் குடல் வீக்கத்தையும், கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமாக இருக்கும் மக்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்படாது. இந்த வைரஸ் தொற்று இளம் குழந்தைகளையும் வயதானவர்களையும் பாதிக்கிறது.
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, குமட்டல், காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை நோரோ வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாகும். அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபர்களுடனான நேரடி தொடர்பு மூலமாகவும் இது பரவுகிறது.
இந்த நோய் வராமல் இருக்க ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு முன்னதாகவும் கைகளை சோப்பால் நன்கு கழுவ வேண்டும். விலங்குகளிடம் பழகுபவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.