பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் ராஜ வாழ்க்கை வேண்டாம் என்றும் தனியாக சுதந்திரமாக உழைத்து வாழ விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தனர்.
அரச குடும்பத்தில் இதுவரையில் நிகழாத ஒரு சம்பவம் என்பதால் அரச குடும்பம் மட்டுமல்லாது பிரிட்டன் நாடே ஒருவித கலக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. தனது மனைவியுடன் ஹாரி கனடாவில் வசிக்கப் போவதாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் தனது மகன் இளவரசர் சார்லஸ் மற்றும் பேரன்கள் வில்லியம்ஸ், ஹாரி உடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்புவிடுத்துள்ளார்.
ஹாரி- மேகன் விரும்பும் இந்த மாற்றத்துக்கு சம்மதிப்பதாகவும் குடும்ப ஒற்றுமை உடையாமல் இருக்கவும் இந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவதாக ராணி தெரிவித்துள்ளார்.
கனடாவில் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குடியேற வருவது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட் கூறுகையில், “அரச குடும்பத்தார் எங்கள் நாட்டுக்கு வருவதை மக்கள் வெகுவாக ஆதரித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான பாதுகாப்பு, அதற்கான செலவு ஆகியவை குறித்து நாங்கள் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது” என்றுள்ளார்.
இளவரசர்கள் வில்லியமும் ஹாரியும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறுகையில்,” அரச குடும்பத்தில் மோதல் ஏற்பட்டதாக ஊடகங்கள் எங்களை பற்றி தவறான செய்திகளை வெளியிடுகின்றன. அரச குடும்பத்தில் மேகனின் வரவு மூத்த இளவரசர் வில்லியம்முக்கு பிடிக்கவில்லை, அதனால் அவர்களிடையே பழைய உறவு இல்லை என்று பொய்யாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
வில்லியம் தனது சகோதரர் ஹாரி உடனான உறவில் விரிசல் ஏற்பட்டதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டதுடன், இனி நாங்கள் இணைந்து இருப்போம்” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.