இஸ்லாமாபாத்:-
பாகிஸ்தான் நாட்டின் தெற்கே சிந்து முதல் வடகிழக்கில் கைபர் பஃதுன்வா வரை பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகிறது.
இதுவரை பாகிஸ்தானில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்துள்ளதால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வெட்டுக்கிளி தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து படையெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதற்காக சீனா 1,00,000 வாத்துகளை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறது. இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்து உள்ளார்.
கிழக்கு சீனாவின் ஜிஜியாங் (Zhejiang) மாகாணத்தில் இருந்து இந்த வாத்துகள் அனுப்பி வைக்கப்படுகிறது. வெட்டுக்கிளி தாக்குதலுக்கு இவைகள் முன்னணி ஆயுதங்களாக இருக்கும்.
ஷாவோஸிங் (Shaoxing) பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள Guo Shao No. 1 என்ற வாத்து இந்த தாக்குதலுக்கு முண்ணனியில் இருக்கும்.
சீனாவிலிருந்து பாகிஸ்தான் புறப்பட வாத்து இராணுவம் தயாராக உள்ளது என்று ஜிஜியாங்கில் உள்ள நிங்போ (Ningbo) செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜிஜியாங் (Zhejiang) வேளாண் அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளரான லு லிஷி (Lu Lizhi) கோழிகளுடன் ஒப்பிடும்போது வாத்துகள் வெட்டுக்கிளிகளுக்கு ஆபத்தான எதிரி.
ஏனெனில் ஒரு கோழி ஒரு நாளைக்கு 70 வெட்டுக்கிளிகளை சாப்பிடும், ஒரு வாத்து 200 க்கும் மேல் சாப்பிடும். இது மூன்று மடங்கு அதிக போர் திறனைக் கொண்டுள்ளது என்று கூறினார்.
கடந்த 2000ம் ஆண்டில் சீனாவின் ஸின்ஜியாங் (Xinjiang) மாகணத்தில் இது போன்ற வெட்டுகிளி தாக்குதல் நடைபெற்றது. அப்போது இதே ஜிஜியாங் மாகணத்திலிருந்து வாத்துக்கள் கொண்டு வரப்பட்டு வெட்டுகிளி தாக்குதல் கட்டுபடுத்தப்பட்டது.