இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை/ மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருந்தவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் (சௌமியமூர்த்தி ராமநாதன் ஆறுமுகன் தொண்டமான்). இவர் கடந்த 26ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 55.
இலங்கையின் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவருமான மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் தான் ஆறுமுகன் தொண்டமான்.
இலங்கையில் உள்ள இந்தியத் தமிழர்களின் அதாவது மலையக தமிழர்களின் ஒரே உரிமைக்குரலை ஒலித்தவர் ஆறுமுகன் தொண்டமான்.
1964ஆம் ஆண்டு மே 29-ம் தேதி பிறந்த ஆறுமுகன் தொண்டமான் பள்ளிகல்வியை ஏற்காடு மான்போர்ட் பள்ளியிலும் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்லூரி படிப்பை பயின்றார்.
ஆறுமுகன் தொண்டமான், 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1993 ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். 1994 நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.
இதுவரை நுவரெலியா மாவட்ட தொகுதியில் தொடர்ச்சியாக போட்டியிட்டு தோல்வியை சந்திக்காத ஒரே வெற்றி வேட்பாளராக ஆறுமுகன் தொண்டமான் திகழ்ந்தார். இலங்கை அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பதவி வகித்தவர் ஆறுமுகன் தொண்டமான். இவர் கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போதும் தோட்ட உட்கட்ட அபிவிருத்தித் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்திய மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை மற்றும் வாக்குரிமை ஆகியவற்றை பெற்றுத் தந்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான். மலையக மக்களின் உரிமைக்காகப் போராடியவரும், மலையகத் தந்தை என போற்றப்படுபவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் தான் ஆறுமுகன் தொண்டமான்.
இலங்கை நாடாளுமன்றத்தில் அமையப்பெற்றுள்ள தலைவர்களின் சிலைகளுள் சௌமியமூர்த்தி தொண்டமானின் சிலையும் இடம் பெற்றுள்ளது.
தனது தாத்தா வழியில் பேரனும் தொடர்ந்து இலங்கையில் உள்ள மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து உழைத்தவர். இலங்கையில் உள்ள மலையகத் தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டித்தர வேண்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார் ஆறுமுகன் தொண்டமான்.
ஜல்லிக்கட்டு விளையாட்டில் மிகவும் ஈடுபாடுடையவர், ஆறுமுகம் தொண்டைமான். ஜல்லிக்கட்டுக் காளைகளையும் வளர்த்து வந்தார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டபோது அதற்கு எதிராகவும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு ஆதரவாகவும் இலங்கையிலிருந்து ஒலித்த குரல் ஆறுமுகன் தொண்டமானுடையது.
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் இடம்பெறுகிறது என்றால் தனி மவுசு இருக்கும் இதற்குக் காரணம் தொண்டமான் குடும்பம்தான். ஏனெனில் இவர்கள் குடும்பத்தினர்தான் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தாங்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை மாடுகளை களமிறக்கி வருகிறார்கள் தொண்டமான் குடும்பத்தார்.
ஆறுமுகன் தொண்டமான் இந்த உலகை விட்டு மறைந்தாலும் இலங்கையில் இந்திய மலையகத் தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து அவரது சித்தாந்த குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.