சாவோ பாலோ:-
பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலோ நகரில் உள்ள பக்கெம்பு முனிசிபல் (Pacaembu) கால்பந்து மைதானம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 200க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாறி உள்ளது.
பிரேசில் நாட்டின் பெரிய நகரமான சாவோபாலோ நகரில் தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதுவரை பிரேசிலில் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து அந்நாட்டிலுள்ள கால்பந்து மைதானங்கள் அனைத்தையும் திறந்தவெளி மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதனையடுத்து பக்கெம்பு கால்பந்து மைதானத்தை தற்காலிக மருத்துவமனை மாற்றியுள்ளனர்.
இதனிடையே பிரேசில் சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்றிக் மன்டேட்டா (Luiz Henrique Mandetta) கொரோனா பரவல் குறித்து கூறுகையில்:-
ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதன் உச்சத்தை அடையும். அதன் பின்னர் படிப்படியாக குறைந்து செப்டம்பர் மாதத்தில் நிலைமை சரியாகிவிடும் என்று கணித்துள்ளார்.
எனவே நாட்டு மக்கள் அனைவரும் வரும் மாதங்களில் மிக கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.