ஜெனிவா:
உலகளவில் தண்ணீர் பாதுகாப்பு, சேமிப்பு மோசமான நிலையில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீரை அசுத்தப்படுத்துவது, அதனால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து உள்ளது. தற்போது பூமியில் உள்ள தண்ணீரில் 0.5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படாமல், சுத்தமான நீராக இருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
அதுபோன்று உலகளவில் வரும் 2050 ஆண்டுக்குள் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும் என, ஐ.நா., எச்சரித்துள்ளது.
ஐ.நா.,வின் உலக வானிலை அமைப்பு தண்ணீருக்கான 2021ம் ஆண்டுக்கான காலநிலை சேவைகள் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுக்கு 1 செ.மீ., அளவில், மண்ணில் ஈரப்பதம் குறைதல், பனி உறைதல், நிலப்பரப்பில் நீர் குறைதல், தண்ணீரை குறைவாக தேக்கி வைத்தல் போன்றவை நிகழ்ந்துள்ளன.
மேலும் பருவநிலை மாறுபாடால் தண்ணீர் தொடர்பான பேரிடர்களான பெருவெள்ளம், பஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் வரும் காலத்தில் ஏற்படும்.
கடந்த 2018ம் ஆண்டில் 360 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்தனர். வரும் 2050ம் ஆண்டுக்குள் 500 கோடியாக உயரும் என தண்ணீருக்கான 2021ம் ஆண்டுக்கான காலநிலை சேவைகள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே கூட்டுறவு நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த நீர் மற்றும் காலநிலை கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .