காத்மண்டு:
நேபாளத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது.
நேபாளத்தின் தேசிய நிலநடுக்கவியல் மையம், ‘நேபாளத்தில் இன்று (செப் -16) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவாகியுள்ளது. ராம்சே, சிந்துபால்சோக் ஆகிய மாவட்டங்களிலும் நேபாளத்தின் கிழக்குப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. எனினும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைந்து நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.