சான் சால்வடார்:-
எல் சால்வடாரின் ஜனாதிபதி நயீப் புக்கேலே (38) சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கைதிகளின் புகைப்படங்களை வெளியிட்டதற்காக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் சமூக-விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு மாறாக வெளிவந்த இந்த படங்கள் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் நாட்டில் உள்ள ஐசல்கோ (Izalco) சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் 22 கைதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அந்நாட்டின் அதிபர் நயீப் புக்கேலே (Nayib Bukele) சிறையிலுள்ள கும்பல் தலைவர்களை தனிமை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதோடு சிறையில் உள்ள கைதிகளுக்கு கடுமையான ஊரடங்கும் பிறப்பித்துள்ளார்.
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் வன்முறைகளுக்கு பெயர்போன நாடு. உலகிலேயே அதிகமான வன்முறைகள் நடைபெறும் நாடுகளில் இதுவும் ஒன்று. தவிர அதிகமான கொலைகள் நிகழும் நாடாக எல் சால்வடார் உள்ளது.
அந்நாட்டின் வன்முறைகளை நிகழ்த்தும் தெரு கும்பல்கள் மிகவும் பிரபலம். இந்தக் கும்பலின் அச்சுறுத்தல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு ஓடி உள்ளனர்.
இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு போலீசாருக்கு அரசு ஒரு உத்தரவிட்டது:-
அதன்படி இந்த கொலைகார தெரு கும்பல்களால் அச்சுறுத்தல் ஏதும் ஏற்பட்டால் பின் விளைவுகள் குறித்து எந்தவித கவலை இன்றி சுட்டுத் தள்ளுங்கள் என்று உத்தரவிட்டது.
அதன் பிறகு ஓரளவு நிலைமை கட்டுக்குள் வந்தாலும் எல் சால்வடார் நாட்டின் பிரபலமான தெரு கும்பல்களான Barrio 18 (18th Street Gang) மற்றும் MS-13 இரண்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மீண்டும் அங்கு வன்முறை வெடித்தது.
தற்பொழுது அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயீப் புக்கேலே-ன் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கும்பல்களின் அட்டகாசங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டில் கடந்த மார்ச் 22 முதல் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.
எல் சால்வடார் நாட்டில் பின்பற்றப்படும் கடுமையான ஊரடங்கு உத்தரவு காரணமாக இதுவரை 298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.