ப்ரெசல்ஸ்:-
ஐரோப்பிய ஒன்றியத்தின் வான் பாதுகாப்பு முகமை (European Union’s aviation safety agency) பாகிஸ்தான் சர்வதேச விமானங்கள் தங்கள் வான்பகுதியில் பறப்பதற்கு ஆறு மாதங்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக பிரிட்டன் தங்கள் நாட்டில் உள்ள லண்டன் ஹீத்ரோ விமான நிலையம், பிர்மின்ஹாம் விமான நிலையம், மான்செஸ்டர் விமான நிலையம் ஆகியவற்றிற்கு பாகிஸ்தான் விமானங்கள் இயங்குவதற்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 22ஆம் தேதி பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரான கராச்சியில் விமானம் விபத்துக்குள்ளானது இதனால் 97 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து விமானியின் கவனக் குறைவு காரணமாகவே நிகழ்ந்தது என்று விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் பாகிஸ்தானில் 860க்கும் மேற்பட்ட விமானிகள் மோசடியாக தேர்ச்சி பெற்று விமானிகளாக வேலை செய்துவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சர்வதேச விமானங்களை இயக்கி வருகின்றனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தான் விமான ஒழுங்காற்று துறையில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர் பணி நீக்கப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டது.
இதனால் பாகிஸ்தான் விமானிகளுக்கு ஏற்கனவே வியட்நாம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் விமானங்கள் தங்கள் வான் எல்லையில் பறப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது கவலைகளை வெளியிட்டு விரைவில் தடை நீங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர் அப்துல்லாஹ் ஹபீஸ் கூறுகையில்:-
கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்கு விமானங்களை இயக்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஓஸ்லோ, கோபன்ஹேகன், பாரிஸ், பார்சிலோனா, மிலன் ஆகிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கும் என்று நம்புவதாக கூறினார்.