கொழும்பு:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் பயணமாக வருகிற 22-ம் தேதி இலங்கைக்கு செல்கிறார்.அங்கு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
மேலும் இம்ரான்கான் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் இம்ரான்கான் உரையாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.கொரோனாவை தொடர்ந்து கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை பாராளுமன்றத்துக்கு இம்ரான்கான் வருகை தரும் நிகழ்ச்சி நடைபெறாது என்று வெளியுறவு துறை அமைச்சர் குணவர்த்தன, அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கொழும்பு கெஸ்ட் வலை தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.இதற்கிடையே இம்ரான் கான் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப வாய்ப்புள்ளதால் அவரது உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.