வடக்கு ஈராக்கில் உள்ள எர்பில் விமான நிலையத்தின் மீது ஆயுதமேந்திய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈராக்கின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக குர்திஷ் உள்ளது. இதன் தலைநகரமான எர்பிலில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் அருகிலேயே அமெரிக்க துணைத் தூதரகமும், அமெரிக்கப்படைகளின் முகாமும் அமைந்துள்ளது. ஈராக்கில் சமீப காலமாக அமெரிக்க படை வீரர்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது தொடர்ந்து கொண்டே உள்ளது.
இந்த நிலையில் எர்பில் விமான நிலையத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என குர்திஷ் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன் பாக்தாத் விமானநிலையத்தின் மீதும் ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பிறகு அங்கு 2500 அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது விமான நிலையம் பாதுகாப்பு படையால் சூழப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் இந்தத்தாக்குதலில் 2ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் ஒன்று விமான நிலையத்தின் மீது மோதியதாகவும் மற்றொன்று இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 911 தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலை ஈராக் எதிர்ப்பு ஈரானிய அமைப்புகள் நடத்தி இருக்கலாம் என அமெரிக்கா மற்றும் ஈராக் அரசாங்கங்களால் சந்தேகிக்கப்படுகிறது. சா.கற்பகவிக்னேஷ்வரன்