பீஜிங்-
நடிகர் ஜாக்கி சான், தான் அரசியலில் ஈடுபட போவதாக கூறியுள்ள அவர், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் தனது அதிரடி சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி உலகம் முழுவதும் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் கவர்ந்தவர்.
தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கிய அவர், ஸ்டண்ட் கலைஞர், கதாநாயகன், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்கலை வித்தகர் ஆவர். இவருக்கு உலகமே முழுதும் ரசிகர்கள் உள்ளனர். இதில், இந்தியாவிலும் குறிப்பாக, தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இதனிடையே ஆசியாவின் தலைவலியான சீனா அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மீது ஆதிக்கம் செலுத்த, அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைபடுத்தியது. இதை எதித்து, ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த விவகாரத்தில், ஹாங்காங்கில் பிறந்த நடிகர் ஜாக்கி சான் சீனாவுக்கு ஆதரவாக, கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தார். இதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
தற்போது சீன திரைப்பட சங்கத்தின் துணைத்தலைவராக உள்ள ஜாக்கி சான், பீஜிங்கில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த சில ஆண்டுகளில் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதை பல நாடுகளுக்குச் செல்லும்போது நேரடியாக நான் உணர்ந்துள்ளேன். சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். ஐந்து நட்சத்திரங்களை உடைய நமது சிவப்புக் கொடிக்கு உலகம் முழுதும் மரியாதை கிடைக்கிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது. எனவே, அக்கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக உள்ளேன் என்றார்.
இதனைத்தொடர்ந்து ஜாக்கி சானின் இந்த கருத்து தற்போது உலகம் முழுவதும் பெரும் விவாதமாகியுள்ளது.