காத்மாண்டு:-
நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியை பிரதமர் பதவி மற்றும் கட்சி பதவி ஆகியவற்றிலிருந்து விலக கூறி ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
நேற்று (ஜூன் 30) நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழு கூட்டம் பலுவடாரில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதில் கே.பி. ஷர்மா ஒலி நேபாள முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தகல் (பிரசண்டா) உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய புஷ்ப கமல் தகல் ‘ பிரதமர் ஷர்மா ஒலியின் பொறுப்பற்ற பேச்சு, இந்தியா உடனான உறவை சீர்குலைக்கும்’ என எச்சரித்தார். மேலும் இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் அளிக்குமாறு கோரினார். ஆனால் இக்கூட்டத்தில் பங்கேற்ற கே.பி.ஷர்மா ஒலி அது குறித்து எதுவும் கூறாமல் மவுனமாக இருந்தார். இதையடுத்து இந்தியா மீதான புகாருக்கு ஆதாரம் தர முடியவில்லையெனில் பதவி விலகுமாறு ஷர்மாவை தகல் கேட்டுக் கொண்டார்.
அதுபோல மூத்த தலைவர்கள் மாதவ் குமார் நேபாள் ஜலநாத் கனல் கட்சியின் துணை தலைவர் பம்தேவ் கவுதம் செய்தி தொடர்பாளர் நாராயண்கஜி ஷ்ரேஸ்தா ஆகியோரும் ஆதாரம் இல்லையெனில் ராஜினாமா செய்யுமாறு ஷர்மா ஒலியை வலியுறுத்தினர். இத்தகைய பரபரப்பான சூழலில் கூட்டம் முடிவடைந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட உடன்படிக்கைப்படி கட்சி தலைவர், பிரதமர் ஆகிய இரு பதவிகளில் ஒன்றை கே.பி.ஷர்மா ஒலி ராஜினாமா செய்து பிரசண்டா பதவியேற்க வழி விட வேண்டும். ஆனால் ஷர்மா பதவி விலக மறுத்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதமே கே.பி. ஒலி பதவி விலக வேண்டி அவரது சொந்தக் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இரு தினங்களுக்கு முன் கே.பி.ஷர்மா தன்னை பதவியில் இருந்து நீக்க இந்தியா முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக தூதரக அலுவலகங்களிலும் ஓட்டல்களிலும் சொந்த கட்சியினரே சதியாலோசனை நடத்துவதாகவும் கூறியிருந்தார்.
முன்னதாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். பின்னர் சொந்த கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.