ரியோ டி ஜெனிரோ:-
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் பல்வேறு பிரபலங்கள் பெரும் தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வருகிறார்கள் .
இந்நிலையில் பிரேசில் கால்பந்து நட்சத்திரமும் பாரிஸ் செயிண்ட் – ஜெர்மெய்ன் (PSG) வீரருமான நெய்மர் கொரோனா வைரஸை எதிர்கொள்ள 10 லட்சம் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளார்.
இந்த நன்கொடையில் ஒரு பகுதி யூனிசெப் (ஐநா குழந்தைகள் நல நிதி)க்கும் மற்றொரு பகுதி நெய்மரின் நண்பரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான லூசியானோ ஹக் என்பவரது அறக்கட்டளைக்கும் செல்கிறது.
லூசியானோ 2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பிரேசில் அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று நம்பப்படுகிறது. இவர் ரியோ டி ஜெனிரோ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனது அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் உதவி வருகிறார்.
நெய்மர் தனது பாரிஸ் செயிண்ட் – ஜெர்மெய்ன் அணியின் சக வீரரான கைலியன் மாபே-யை (Kylian Mbappe) பின்பற்றி இந்த நிவாரண நிதியை அளித்துள்ளார். மாபே கடந்த மாதம் பிரஞ்ச் அறக்கட்டளை ஒன்றிற்கு கொரோனா நிவாரண நிதியாக பெரும்தொகை ஒன்றினை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெய்மர் தற்பொழுது மன்கரடிபா-வில் (Mangaratiba) உள்ள தனது சொகுசு பங்களாவில் தனிமையில் உள்ளார்.
நெய்மர் உலகிலேயே அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்து வீரர்களில் முன்னிலை வகிப்பவர். மாதம் ஒன்றுக்கு நெய்மரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 3.2 மில்லியன் டாலர்களாகும்.