ப்ராக்:-
செக் குடியரசு நாட்டின் தலைநகர் ப்ராகில் (Prague) உள்ள 14ம் நூற்றாண்டு பாலம் ஒன்றில் கொரோனா வைரஸுக்கு குட் பை சொல்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
செக் குடியரசு நாட்டில் கொரோனா வைரஸ் ஊடரங்கு கட்டுப்பாடுகளை தளர்வுகள் தொடங்கி ஒரு மாதத்துக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தொற்று பரவுவது நின்றுவிட்டதை கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வ்ல்டாவா நதியில் (Vltava River) உள்ள சார்லஸ் பாலத்தில் (Charles Bridge) ஒரு “பிரியாவிடை விருந்துக்காக” கூடியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவது நின்றுவிட்டதை கொண்டாடும் வகையில், உள்ளூர் கஃபே உரிமையாளரான ஒன்ட்ரேஜ் கோப்ஸா (Ondrej Kobza) என்பவர் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து பாலத்தின் மீது 500 மீட்டர் நீளம் கொண்ட உணவு மேஜை அமைக்கப்பட்டது. இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளைக் கொண்டு ஒரு இசை கச்சேரி நடத்தினார்கள், உள்ளூர்வாசிகள் வீட்டிலிருந்து உணவு மற்றும் பானங்களைக் கொண்டு வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். விருந்தினர்கள் ஒருவருக்கொருவர் துளியும் சமூக இடைவெளி இன்றி நெருக்கமாக அமர்ந்து, பாடி, நடனமாடி விருந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இதன்படி, செக் குடியரசின் ப்ராக் நகரில் ஜூன் 30ஆம் தேதி கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் சார்லஸ் பாலத்தின் மீது 500 மீட்டர் நீளமுள்ள இடத்தில் மேஜையில் அமர்ந்து குடியிருப்பாளர்கள் உணவருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 12,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்று வழக்குகளையும், 349 இறப்புகளையும் செக் குடியரசு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்ப நாடுகளில் முதலாவதாக மார்ச் 12-ம் தேதியே தனது எல்லைகளை மூடியது செக் குடியரசு. செக் குடியரசு நாட்டில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டிற்கு முக்கிய வருவாய் சுற்றுலாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.