மேட்ரிட்:-
ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் இத்தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் செய்வதற்காக சீனாவில் இருந்து வாங்கப்பட்ட பரிசோதனை கருவிகள் எதுவும் செயல்படவில்லை என்று ஸ்பெயின் கூறியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஷென்ஸென் பயோஈஸி (Shenzhen Bioeasy Biotechnology) நிறுவனத்திடமிருந்து அதிக அளவில் கோரோனா பரிசோதனை கருவிகளை ஸ்பெயின் வாங்கியிருந்தது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் இருந்து வாங்கிய கருவிகள் எதுவும் செயல்படவில்லை என்று ஸ்பெயின் கூறியுள்ளது.
ஆனால் சீனாவோ ஸ்பெயின் நாட்டு டாக்டர்களுக்கு இந்த கருவிகளை சரிவர கையாளத் தெரியவில்லை என்று சமாளித்து வருகிறது. மேலும் அந்த கருவிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த டெமான்ஸ்ட்ரேஷன் வீடியோக்களை தங்களது வீ-சாட்டில் ஆப்-ல் வீடியோக்களாக வெளியிடுவதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஸ்பெயின் நாட்டில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
சீன அரசாங்கம் அல்லது அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்களும் அனுப்பியுள்ள பரிசோதனை கருவிகளில் எதுவும் குறை ஏற்படவில்லை. ஆனால் ஷென்ஸென் நிறுவனம் அனுப்பி உள்ள கருவிகள் தொடர்பாக மட்டும் தான் புகார்கள் வந்துள்ளது.
அதேபோல் ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் கேட்டுள்ள மற்ற சுகாதார பொருட்கள் சீனாவில் இருந்து இன்னும் அனுப்பப்படவில்லை. அதேபோல் சீனா அளித்துள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இந்த ஷென்ஸென் நிறுவனத்தின் பெயர் இல்லை.
முக்கியமாக இந்த ஷென்ஸென் நிறுவனம் வெளிநாடுகளுக்கு பரிசோதனை கருவிகளை அனுப்புவதற்கான சீன அரசாங்கத்தின் National Medical Products Administration-ன் உரிமத்தை பெறவில்லை.
ஆனால் இந்த நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதன் அடிப்படையில்தான் சீனாவிலிருந்து அந்த நிறுவனத்தின் பரிசோதனைக் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஸ்பெயின் மட்டுமல்லாது செக்குடியரசு நாடும் சீனாவிலிருந்து வாங்கப்பட்ட பரிசோதனைக் கருவிகள் 80 சதவீதத்திற்கும் மேல் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளது.
இதுகுறித்து கூறிய செக் குடியரசின் துணை சுகாதார துறை அமைச்சர் ரோமன் ப்ரைமுலா (Roman Prymula):-
80 சதவீத கருவிகள் வேலை செய்யப்படவில்லை என்பது உண்மை அல்ல. ஆனால் 30 சதவீதத்துக்கும் அதிகமான கருவிகள் வேலை செய்யவில்லை என்பது உண்மை. எனவே அந்த கருவிகளை திரும்ப அனுப்பிவிட்டு நல்ல கருவிகளை வாங்குவதற்காக உள்ளோம் என்றார்.
இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு முன்னிலையில் சீனா அளித்த பதிலில்:-
இந்தக் கருவிகள் மனித உடலில் உள்ள வைரஸை கண்டறியாது மாறாக மனித உடலின் ஆன்டிபாடி அளவை தான் கணக்கிடும். இவ்வாறு மனித ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடி அளவு எவ்வளவு உள்ளது என்று கணக்கிடுவதன் மூலமாக அந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் தொற்று அளவை கணக்கிட முடியும்.
இதுதான் இந்த கருவியின் அடிப்படை செயல்பாடு என்று கொரோனாவின் பூர்வீகமான வூஹானில் உள்ள சீனாவின் நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் மைய (Chinese Center for Disease Control and Prevention) ஆய்வாளர்கள் கூறியுள்ளார்.