வாஷிங்டன்:-
உலக நாடுகள் மொத்தத்தையும் தற்பொழுது ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று தெரிய வந்தால் அதற்கான பின்விளைவுகளை அந்நாடு எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்:-
தற்பொழுது உலகம் முழுவதையும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கொரோனா வைரஸை சீனா தனது நாட்டிலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.
ஒருவேளை இது தவறு, என்றால் தவறு தவறு தான். ஆனால் இது தெரிந்தே நிகழ்ந்திருந்தால் நிச்சயமாக அதற்கான பின் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் என்ன மாதிரியான எதிர்த் தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் என்பதே அவர் விளக்கவில்லை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து சீனா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று வெளிப்படையாக விமர்சித்தார். அதோடு உலக சுகாதார அமைப்பு-க்கு அளித்து வந்த நிதியும் ரத்து செய்தார்.
மேலும், கடந்த வருட இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் குறித்து சீனா முன்பே எச்சரிக்கவில்லை என்றும் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சீனாவையும் அதன் அதிபர் ஜி ஜிங்பிங்கையும் நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
அதோடு ஆரம்பம் முதலே கொரோனா வைரஸை ட்ரம்ப் “சீன வைரஸ்” என்றே அழைத்து வருகிறார்.
ஆனால் சீனாவோ இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருவதோடு அமெரிக்க ராணுவம் தான் தங்கள் நாட்டில் இந்த வைரஸை பரப்பியது என்று குற்றம் சாட்டி வருகிறது.
இந்த வருட இறுதியில் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ட்ரம்புக்கு எதிரான அலை வீசுகிறது. இந்நிலையில் தொடர்ந்து சீன எதிர்பதன் மூலமாக தனக்கான ஓட்டு வங்கியை ட்ரம்ப் ஏற்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டு எழுந்து வருகிறது.