வாஷிங்டன்,
கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கின. ஜூலை மாத இறுதியில் 90 சதவீத படைகள் வெளியேற்றியது
அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 15ந்தேதி தலீபான்கள் நாட்டை முழுமையாக தங்கள் வசமாக்கினர்.
தலீபான்கள் தலைமையில் அமைந்துள்ள அரசை பெரும்பலான உலக நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
இச்சூழலில் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிறுத்தியுள்ளன. அதே போல் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கும் கடனுதவியையும் சர்வதேச நிதியம் நிறுத்தி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல லட்சம் மக்கள் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் உணவு இன்றி தவித்து வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் அங்கு சுகாதார சேவையும் மிகவும் மோசமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் மனிதாபிமான உதவிகளுக்காக ஆப்கானிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,078 கோடியே 63 லட்சத்து 92 ஆயிரம் வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
இந்த உதவியானது அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணைம், யுனிசெப், இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சுதந்திரமான சர்வதேச மற்றும் அரசு சாரா மனிதாபிமான அமைப்புகள் மூலமாக ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறுகையில் இந்த நிதியானது அண்டை நாடுகளில் உள்ள ஆப்கானிய அகதிகள் உட்பட 1 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான பாதிக்கப்படக்கூடிய ஆப்கானியர்களுக்கு நேரடியாக ஆதரவை வழங்குகிறது.சுகாதார பற்றாக்குறை, கொரோனா, வறட்சி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வரவிருக்கும் குளிர்காலம் ஆகியவற்றால் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க இது உதவும் என்றார்.