iநவீன கால இஸ்லாமிய கோட்பாடுகளோடு இறைவன் பெயரில் மதகுருமார்கள் ஆட்சி நடத்தும் ஜனநாயகம் என ஒரு சிக்கலான அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிறது இரான்.
இந்நிலையில், மூத்த அரசியல் தலைவர் மற்றும் ‘ஏழைகளின் நாயகன்’ என புகழப்படும் இப்ராஹிம் ரைசி (60) ஈரானின் அடுத்த அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
ஈரானில், அதிபர் ஹசன் ருஹானியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, புதிய அதிபருக்கான தேர்தல் சமீபத்தில், நடைபெற்றது.
இந்த தேர்தலில், அதிபர் பதவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல்நாசர் ஹெமட்டி, ஈரான் புரட்சிப் பாதுகாப்பு படை முன்னாள் தலைவர் மோசன் ரெசாய் உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலின் முடிவில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
யார் இந்த இப்ராஹிம் ரைசி?
தற்போது அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இப்ராஹிம் ரைசியை உலகம் உற்று நோக்க ஆரம்பித்துள்ளது.
ஈரான் மக்கள் மத்தியில் ஊழலை ஒழிக்கும் நாயகனாகப் புகழ் பெற்றவர் இப்ராஹிம் ரைசி. ஈரான் அரசியல் வட்டாரத்தில் இப்ராஹிம் உலகளவில் தெரிந்த முகம் இல்லை என்றாலும், இவரது செல்வாக்கு மக்கள் மத்தியில் அளப்பரியது. தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 62 சதவீத ஓட்டுகள் இவருக்கு கிடைத்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் இவர் பொதுமக்களிடையே ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்தது, ஊழல் செய்யும் உயரதிகாரிகள் என யாராக இருந்தாலும் அவர்களது பெயர் மற்றும் விவரங்களை எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் மக்கள் மத்தியில் வெளிப்படையாக கூறி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இப்ராஹிம் ரைசி.
1960-ம் ஆண்டு பிறந்த இப்ராஹிம் 1979-ம் ஆண்டு தனது 19வது வயதில் இஸ்லாமிய புரட்சியில் கலந்து கொண்டு அரசியல் வட்டாரத்தில் பிரபலமானார்.
டெஹ்ரானில் புரட்சிகர நீதிமன்றத்தின் துணை வழக்கறிஞராகப் பணியாற்றிய இப்ராஹிம், தீவிர வலதுசாரி எதிர்ப்பாளராகத் திகழ்ந்தார்.
கடந்த 1988-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் மற்றும் இதர இடதுசாரி கட்சிகள் ஏற்படுத்திய வன்முறைக்கு முக்கிய காரணமாக இப்ராஹிம் திகழ்ந்தார்.
ஈரான் தலைவர் அயதுல்லா அலி கோமேனியின் நம்பிக்கைக்குரிய இப்ராஹிம் ரைசி, 1988ல் அரசுக்கு எதிரான புரட்சியின் போது, அரசியல் கைதிகள் ஏராளமானோருக்கு மரண தண்டனை வழங்கியவர் ரைசி.
தற்போது வரை அவரது எதிர்ப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இது குறித்து 2018ம் ஆண்டு கேள்வி எழுப்பப்பட்டபோது இக்குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
ஆனால் அமெரிக்கா, இப்ராஹிம் ரைசியை இவரை தடை செய்யப்பட்டோர் பட்டியலில் வைத்துள்ளது. அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஒருவர், ஈரான் அதிபராவது வரலாற்றில் இதுவே முதன் முறை.
பல ஆண்டு கால அரசியல் அனுபவம் பெற்ற இப்ராஹிம் ரைசி, தேசிய பிராசிகியூட்டர் ஜெனரல், டெக்ரானின் பிராசிகியூட்டர் ஜெனரல், ஈரான் நாட்டின் சட்ட துணை தலைவர் உள்ளிட்ட பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மத ஆன்மிகத் துறையில் பட்டம் பெற்ற இவர், 2018ம் ஆண்டிலிருந்து மாஷா நகரில் உள்ள சிட்டி செமினரி-யில் இஸ்லாமிய மதத்தை போதித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஹாசன் ரோஹானி கையெழுத்திட்டதை இப்ராஹிம் கடுமையாக விமர்சித்திருந்தார். ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்கி அதன் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்க இப்ராஹிம் பல திட்டங்களை முன்மொழிந்துள்ளார்.
ஈரானின் உயரிய தலைவர் அயோடெல்லா அல் கோமேனி வயது மூப்பு காரணமாக இவர் அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், புதிய அதிபராக உள்ள இப்ராஹிம் ரைசி, கோமேனியை அடுத்து ஈரானின் உயரிய தலைவராகப் பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
ஏனெனில், ஈரானில் அதி உயர் தலைவர் முப்படைகளின் தளபதியாவார். பாதுகாப்பு படைகள் இவரது கட்டுப்பாட்டில் இருக்கும். தலைமை நீதிபதி, கார்டியன் கவுன்சில் உறுப்பினர்களில் பாதி பேர், வெள்ளிக்கிழமை பிரார்த்தனை தலைவர்கள், அரசுத் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் தலைவர் போன்ற பதவிகளுக்கான நபர்களை இவர்தான் தேர்வு செய்கிறார்.
இதனிடையே, புதிய அதிபராகும் இப்ராஹிம் ரைசிக்கு ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, உள்நாட்டு பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, அமெரிக்கா உடனான உறவு, இஸ்ரேல் விவகாரம் உள்ளிட்ட பல சவால்கள், காத்திருக்கின்றன.